சென்னை: சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நின்று செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பொது மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாமண்டூர் மோட்டலில் திண்டிவனம் மார்க்கமாக செல்லும் போக்குவரத்து கழக பஸ்கள், உணவு மற்றும் சிற்றுண்டிக்காக நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து மண்டல பொது மேலாளர்கள், தங்கள் மண்டலங்களை சார்ந்த சென்னையில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக செல்லும் பஸ்களை மாமண்டூர் மோட்டலில் உணவு மற்றும் சிற்றுண்டிக்காக நின்று செல்ல சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர்களுக்கு தக்க நெறிமுளை வழங்க வேண்டும்.
போக்குவரத்துக்கழக பஸ் மாமண்டூர் மோட்டலில் தினமும் நின்று செல்வதை உறுதி செய்ய, மேல்மருவத்தூர் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் மாமண்டூர் மோட்டலில் நின்று செல்ல வேண்டும் என்று வழி விவர பட்டியலில் சீல் வைத்து அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.